ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஐம்பெரும் விழா-2011

புதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டு ஐம்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் திங்கள் 7ஆம் நாள்(23.7.11) காரிக்கிழமை,மாலை 5.30 மணிக்கு, புதுக்கோட்டை சாந்தநாதபுரம் எஸ்.வி.எஸ் சீதையம்மாள் திருமண அரங்கில் , மன்றத்தின் தலைவர் திரு.பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தினை பாவலர் பொன்.க.அவர்கள் பாடினார். வரவேற்புரை யினை மன்ற நிறுவனர் புலவர் பொன்.கருப்பையா வழங்கினார். ஆண்டறிக்கை மன்றத்தின் செயலாளர் திரு.சிதம்பர ஈசுவரனால் அளிக்கப்பட்டது.விழா நிகழ்ச்சிகளை மன்றத்தின் துணைத் தலைவர் புலவர் மு.பா அவர்கள் அழகுறத் தொகுத்து வழங்கினார்.
         விழாவின்  முதல் நிகழ்வாக ஆடல் கலையினை, செல்வி பா.ரூபபர்வதா அவர்கள் நிகழ்ததினார். அதனைத் தொடர்ந்து  23.1.2011ல் திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் செம்மொழி கருத்தரங்க மேடையில் அரங்கேற்றப் பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்ட ”பழிதவிர்த்த பாவலர் ” எனும் சங்க இலக்கிய நாடகக் காணொளி திரையிடப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.          
        இரண்டாம் விழாவாக, புலவர் பொன்.க எழுதிய ”திருப்புக தேரை” என்னும் சங்க இலக்கியக் குறுநாடக நூலினை மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்த்திரு எம்.எஸ்.முத்துச்சாமி அவர்கள் வெளியிட்டார்.முதல் நூலினை புதுக்கோட்டை மாவட்ட வணிகர் கழகத் தலைவர் அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா அவர்கள் பெற்றுக் கொண்டார். நூலினை சாகித்திய அகாதமி தமிழ்ப்பிரிவு ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் அறிமுகம் செய்து நூலின் அமைப்பு, நூல் நுதலும் பொருள், நூலின் நோக்கம் பற்றி அழகுற எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன் அவர்கள், நூலில் இடம் பெற்றுள்ள ஐந்து குறுநாடகங்கள் பற்றியும்,  மொழிநடை, பாத்திரப் படைப்பு, நூல் ஏற்படுத்த உள்ள தாக்கம்  பற்றியத் திறனாய்வினை பாங்குடன் விளக்கினார். நூலினை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் அழகிய தமிழில், நூல் நயத்தினை விளக்கி, நூல் எதிர்கால இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக அமைந்துள்ளமையையும். தவறுகளும் அநீதி இழைப்பவர் எவராக இருந்தாலும் அவற்றுக்கு  எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாகப் பெண்கள், குரல் கொடுக்க வேண்டும என இக்கால சமூக விழிப்புணர்வுச் சிந்தனைகளை வெளிப்படுத்தியது சிறப்பாக அமைந்திருந்தது..
         மூன்றாவதாக , சாதனை படைத்த மாணவ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. சூரிய சக்தியால் இயங்கும் நீர் இறைக்கும் பொறியினைக் கண்டு பிடித்த, திருவண்ணாமலை திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி மாணவர் சே.இராஜேஸ் , சாண எரிவாயுவின் உற்பத்திக்கு உறுதுணை செய்யும் வேப்பிலையின் வீரியம் பற்றிய ஆய்வினை 96 ஆவது அகில இந்திய அறிவியல் மாநாட்டில் படைத்துச் சாதனை படைத்த, புதுக்கோட்டை கந்தர்வகோட்டை வட்டம் ,அரியாணிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் இல..பிரபு , மண்ணரிப்பைத் தடுக்க காடுகள் வளர்ப்பின் அவசியம் பற்றிய ஆய்வினை 98 ஆவது அகில இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் படைத்து இளம் விஞ்ஞானியாகப போற்றப்பட்ட ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி செல்வி க.மகாலெட்சுமி ஆகியோருக்கு மாணவச் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக உயிரி தொழில் நுட்பத் துறைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாறன், இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார். அருகி வரும் எரிபொருள் தேவைகளுக்கான மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பையும் , இயற்கைப் பாதுகாப்பின் அவசியம் பற்றியும் கருத்துரை வழங்கி, அத்தகு சாதனைபடைக்க ,அவர்களை வழி நடத்திய தமிழ்நாடு அறிவியல் இயக்க வழிகாட்டி ஆசிரியர்கள் மணிகண்டன், சுரேஸ்ராசன் ஆகியோரை வெகுவாகப் பாராட்டினார். இளம் விஞ்ஞானிகளை மன்றத்தின் துணைச் செயலாளர் புலவர் மகா சுந்தர், மன்ற உறுபப்பினர்கள் கவிஞர் வீ,கே. கஸ்தூரிநாதன், இராச.ஜெய்சங்கர் ஆகியோர் அழகாக அறிமுகம் செய்தனர்.
          நான்காவது விழாவாக, 2010.11 கல்வியாண்டில் மேல்நிலை, இடைநிலை அரசுப் பொதுத் தேர்வுகளில்புதுக்கோட்டை  மாவட்டஅளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் புதுக்கோட்டை நகர் எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி முதல் மாணவர்களுக்கும் ”முதல் மாணவர்” விருதுகளை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்த்திரு ரெ.பரமசிவம் அவர்கள் வழங்கினார். அவர் தனது உரையில், இத்தகு சேவையினைச் செய்யும்  மன்றத்தின் செயல்பாட்டினை வெகுவாகப் பாராட்டியதோடு,  மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள இது போன்ற பாராட்டு விருதுகள்  உத்வேகம் அளிக்கும் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து விருது பெற்ற மாணவர்களை சுபபாரதி கல்வி நிறுவனத் தலைவர் தமிழ்த்திரு ஜி.தனசேகரன், வெங்கடேசுவரா கல்வி நிறுவனத் தலைவர் மொழிவளக் கவிஞர் இராம.வ.கதிரேசன், தொலைதொடர்புத்துறை கோட்டப் பொறியாளரும் கவிஞர் மன்றத் தலைவருமான தமிழ்த்திரு நிலவை வ.பழனியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
          ஐந்தாவது விழாவாக ,2010-11 கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் ,புதுக்கோட்டை மாவட்டத்தில் முழுத் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா, புதுக்கோட்டை உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்த்திரு சண்முக பழனியப்பன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மறமடக்கி, தாஞ்சூர், கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆயிங்குடி(தெ) கீழையுர், இராசேந்திரபுரம், கிருஷ்ணாஜிபட்டினம், கிளாங்காடு, குருங்களுர், தாழனூர், போசம்பட்டி ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், விருதுகளைப் பெற்றனர்  விழா சிறப்புற அமைய, எஸ்.வி.எஸ்.விஜயா டயர்ஸ் எஸ்.வி.எஸ் செந்தில் ஆண்டவர், எஸ்.வி.எஸ்.ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் எஸ.வி.எஸ்.வி.ஜெயக்குமார், குறள் நெறிப்பயிலக நிறுவுனர் திருமதி சந்திரா ரவீந்திரன், வெங்கடேசுவரா கல்வி நிறுவன அறங்காவலர் திரு ஆர்.ஏ. குமாரசாமி, ஏர்செல் ஜெய் பார்த்திபன், பாரத் வணிக வளாக உரிமையாளர் திரு சுந்தரமூர்த்தி, கோடீசுவரா அழகப்பன் ஆகியோர் பேருதவி புரிந்தனர். நிறைவாக மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.மதிவாணன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழா பற்றிய விளம்பரங்களை புதுக்கோட்டை வயி.ச.நகைமாளிகை திரு வெங்கடாசலம் அவர்களும் சி.டி.என், எஸ்.ஆர், எம்.டி.வி.உள்ளுர் தொலைக் காட்சி நிறுவனங்களும், நாளேடுகளும் பரப்புரை செய்திருந்தது நன்றிக்குரியதாக இருந்தது. விழாவில் கலந்து கொண்ட மாணவர் பெற்றோர்,  பார்வையாளர் அனைவருக்கும்  பழனியப்பா உணவக உரிமையாளர் தமிழ்ததிரு சண்முக பழனியபன் அவர்களும், பேக்கரி மகராஜ் உரிமையாளர் தமிழ்த்திரு சீனு.சின்னப்பா அவர்களும் இனிப்பு மற்றும் இரவுச் சிற்றுண்டி வழங்கியுதவினர். விழாவிற்குப் புதுக்கோட்டைத் திருக்குறள் கழகத் தலைவர் திரு ப.இராமையா, இலக்கியப் பேரவை திரு.மு.முத்து சீனிவாசன், கவிராசன் இலக்கியப் பேரவை க.முருகபாரதி, உலகத்திருக்குறள் பேரவை இரா.நாகலெட்சுமி, சத்யா நகைமாளிகை மு.இராமுக்கண்ணு, புலவர் மா.நாகூர், ந.புண்ணியமூர்த்தி, கலை இலக்கிய அமைப்பைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் செம்பை மணவாளன், முனைவர்.சு.மாதவன். ஆனந்தஜோதி திங்களிதழ் ஆசிரியர் மீரா.சுந்தர் . புலவர் துரை.மதிவாணன், ஜே.ஆர்.சி. பரமசிவம், பசுமைப்படை மீனாட்சி சுந்தரம், ஊர்க்காவல்படை நண்பர்கள். நண்பா அற்க்கட்டளையினர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ஆ.செல்லத்துரை, பொருளாளர். முனியாண்டி நல்லாசிரியர் மா.சத்தியமூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், நிருவாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்  செய்தியாளர்கள் என் நூற்றுக் கணக்கானோர் விழா நிறைவு வரை இருந்து சிறப்பித்ததும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும்  மூன்று மணிநேரம் நடந்த ஐம்பெரும் விழா முழுமைக்கும் இருந்து சிறப்பித்ததும் மன்ற வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தேனீக்ளின் சுறுசுறுப்போடு செய்த மன்றத்தின் பொறுப் பாளர்கள் திருவாளர்கள் சு.இராசேந்திரன், அ.நீலா, இரா.செல்லையா, ஆ.செல்வராசு, ,ஆ.குமார், ச.கோகர்ணேசன், வெ.பரமசிவம், .இராச.ஜெய்சங்கர், மா.கண்ணதாசன்,  ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.இரவு.8.59 மணிக்கு நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. .

திங்கள், 18 ஜூலை, 2011

2011 ஐம்பெரும் விழா அழைப்பிதழ்.

புதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டுவிழா ,ஐம்பெரும் விழாவாக, வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு  2042 கடகம் 7 ஆம் நாள் ( 23.07.2011) காரி(சனி)க்கிழமை, புதுக்கோட்டை சாந்தநாதபுரம், எஸ்.வி.எஸ் சீதையம்மாள் திருமண அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. மன்றத்தின் தலைவர் திரு பொன்.பால சுப்பிரமணியன் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார்.
                  விழாவின் முதல் நிகழ்வாக கலைவிழா நடைபெறஉள்ளது. செல்வி பா.ரூபபர்வதா ஆடல்கலை நிகழ்த்துகிறார். அதனைத் தொடர்ந்து மணிச்சுடர் கலைக்கூடம் வழங்கும் ” பழிதவிர்த்த பாவலர் ” என்னும் சங்க இலக்கிய நாடகக் காணொளிப் படக்காட்சி திரையிடப்படுகிறது.
        நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா வரவேற்புரை வழங்க உள்ளார். செயலாளர் சிதம்பர ஈசுவரன்  ஆண்டு அறிக்கை வழங்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து,குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் முன்னிலையில்  புலவர் பொன்.கருப்பையா அவர்களின் ” திருப்புக தேரை” என்னும் சங்க இலக்கியக் குறுநாடக நூலினை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் தமிழ்த்திரு எம்.எஸ்.முத்துச்சாமி அவர்கள் வெளியிட உள்ளார். முதல் நூலினை  புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் தமிழ்த்திரு சீனு.சின்னப்பா அவர்கள் பெற்றுக் கொள்கிறார். அந்நூலினை சாகித்திய அகாதமி ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் அறிமுகம் செய்யவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் திறனாய்வு செய்யவும் உள்ளனர்.
           மூன்றாவது விழாவாக, சாதனை படைத்த இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு செய்யப்படுகிறது. திருவண்ணாமலை திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி மாணவர் சே.இராஜேஸ், புதுக்கோட்டை அரியாணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் இல.பிரபு, ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி க.மகாலெட்சுமி ஆகிய மாணவச் சாதனையாளர்கள், அவர்களின் அறிவியல் ஆய்வுகளுக்காகப் பாராட்டப்பட உள்ளனர்..இவர்களை தஞ்சாவுர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக உயிர் தொழில் நுட்பத்துறைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாறன் அவர்கள்  பாராட்டி விருது வழங்க உள்ளார்.
          நான்காம் விழாவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2010-11 கல்வி யாண்டில் இடைநிலை, மேல்நிலை அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும்  புதுக்கோட்டை நகர அளவில் உள்ள அனைத்து அரசு, மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளிலும் பயின்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் ” முதல் மாணவர் விருது” விருதுகளை, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்த்திரு ரெ.பரமசிவம் அவர்கள் வழங்கிப் பாராட்டுரை செய்கிறார். முதல் மாணவர்களுக்கு,  கைக்குறிச்சி சுபபாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் தமிழ்த்திரு ஜி.தனசேகரன், வெங்கடேசுவரா கல்வி நிறுவனத் தலைவர் தமிழ்த்திரு இராம.வ.கதிரேசன் , தொலைதொடர்புத் துறைக் கோட்டப் பொறியாளர் தமிழ்த்திரு கவிஞர் நிலவை.ந.பழனியப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
        ஐந்தாம்  விழாவாக, கடந்த கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைநிலை, மேல்நிலைத் தேர்வுகளில் முழுத்தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு, புதுக்கோட்டை உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் தமிழ்த்திரு சண்முக பழனியப்பன் அவர்கள் முன்னிலையில்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்த்திரு ரெ.பரமசிவம் அவர்கள் விருதுகள் வழங்கிச் சிறப்பி்க்கிறார்.
                   கீழ்க்கண்ட பள்ளிகள் அவ்விருதினைப் பெறகின்றன.
1.அரசு மேல்நிலைப்பள்ளி-மறமடக்கி, 2.அரசு மேல்நிலைப் பள்ளி-தாஞ்சூர்,3.அரசுமேல்நிலைப்பள்ளி-கல்லூர்.4.அரசு உயர்நிலைப் பள்ளி- ஆயிங்குடி,5.அரசு உயர்நிலைப் பள்ளி-கீழையுர்,6.அரசு உயர்நிலைப்பள்ளி-இராசேந்திரபுரம்,7.அரசு உயர்நிலைப்பள்ளி-கிருஷ்ணாஜி பட்டினம்,8.அரசு உயர்நிலைப்பள்ளி- கிளாங்காடு, 9.அரசு உயர்நிலைப்பள்ளி-குருங்களுர்,10.அரசு உயர்நிலைப்பள்ளி,தாழனூர்,11.அரசு உயர்நிலைப் பள்ளி- போசம்பட்டி.
          மேற்கண்ட விழா நிகழ்வுகளை புலவர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் தொகுத்து வழங்க இருக்கிறார். விழா நிறைவில் மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் க.மதிவாணன் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.
         புதுக்கோட்டையின் புகழ்மிக்க அறமனச் செம்மல்களின் பேராதரவோடு சிறப்பாக நடைபெற உள்ள இவ்விழாவிற்குத் தங்களின் வருகையையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்.